Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குண்டும், குழியுமான சாலை சீரமைக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் மறியல்

செப்டம்பர் 19, 2020 06:58

திருநெல்வேலி: மாநகராட்சிக்கு உட்பட்ட,  மேலப்பாளையம் மண்டலத்தில், அதிகப் போக்குவரத்து உள்ள பிரதான சாலை, திருநெல்வேலி- அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையில் நாள்தோறும், நூற்றுக்கணக்கான வாகனங்கள், வந்து செல்கின்றன. மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா"வில் தொடங்கி, கருங்குளம் போலீஸ் செக்போஸ்ட் வரை, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு, குண்டும் குழியுமாக, கரடு, முரடாக, சமதளம் அற்று இருப்பதால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்துடன் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. விபத்துக்கும் உள்ளாகி விடுகின்றன. எனவே, இந்த முக்கிய சாலையை, உடனடியாக சரிசெய்து தர வேண்டும் எனக் கோரி,   எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்,  நேற்று காலையில், மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி தலைவர் புஹாரி சேட் தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் மெஹபூப் ஜான், இணைச்செயலாளர் பாளை ஜிந்தா மீரான்,  செயற்குழு உறுப்பினர் ஜவுளி காதர், வார்டு தலைவர் ரியல் காஜா  உட்பட, பலர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலைமறியலால் திருநெல்வேலி- அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்